Latestமலேசியா

நான் முதலில் மலாய்க்காரர்” என்ற தனது முந்தையக் கூற்று தற்காலத்திற்கு ஏற்புடையதல்ல; முஹிடின் புது விளக்கம்

கோலாலம்பூர், மே-5, தனது இன அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் “நான் முதலில் மலாய்க்காரர்” என முன்பொரு முறை தாம் கூறியிருந்தது, தற்காலச் சூழலுக்கு ஏற்புடையதல்ல.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அவ்வாறு கூறியுள்ளார்.

“நான் இப்போது அனைத்து மலேசியர்களுக்குமான தலைவர் என்பதே முக்கியமென” அந்த முன்னாள் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

“நான் ஒரு மலேசிய மலாய்க்காரர்; அதற்காக மலாய்க்காரர் நலனை மட்டுமே சிந்திப்பவன் அல்ல; சீனர்களையும் இந்தியர்களையும் பிற இனத்தாரையும் அரவணைத்துச் செல்பவன்” என்றார் அவர்.

பெரிக்காத்தான் கூட்டணி கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் ‘இந்தியர் ஒற்றுமை விழா’வில் பேசிய போது தான் ஸ்ரீ முஹிடின் அவ்வாறு சொன்னார்.

2010-ஆம் ஆண்டில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் துணைப் பிரதமராக இருந்த முஹிடின், “நான் முதலில் மலாய்க்காரர்” என பகிரங்கமாக கூறியிருந்தார்.

ஆனால் அதற்காக தாம் மலேசியன் இல்லையென ஆகிவிடாது என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

தன்னை ‘மலாய் மேலாதிக்கவாதியாக’ காட்டிக் கொள்ளும் முஹிடின், நஜீப் அரசாங்கத்தின் ‘ஒரே மலேசியா’ கொள்கைக்கு உடன்படுவாரா என, DAP-யின் மூத்த தலைவர் தான் ஸ்ரீ லிம் கிட் சியாங் விட்ட சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் முஹிடின் அவ்வாறு கூறியிருந்தார்.

நாட்டின் துணைப் பிரதமராக இருப்பவர் இப்படி பேசலாமா என, குறிப்பாக சீன – இந்திய மக்களிடையே அப்போது சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியர்களுக்கு தற்போது தலைவர்கள் என்று யாருமில்லை என தம்மிடம் சொல்லப்பட்டதாகவும், அது உண்மையிலேயே தமக்கு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருப்பதாகவும் முஹிடின் தெரிவித்தார். இந்தியச் சமூகத்தில் வெற்றிப் பெற்றவர்களாக வலம் வரும் தம் நண்பர்கள் பலர், இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தலைவராக இப்போது எவருமில்லை என தம்மிடம் கூறியதாக முஹிடின் சொன்னார்.

இந்தியச் சமூகத்துக்கு என்னதான் ஆனது? இது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக தாம் வியப்படைந்ததாக முஹிடின் மேலும் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!