
கோலாலம்பூர் , மே 7 – R&R ஓய்வுப் பகுதிக்கு அருகே ஷா அலாம்
கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்ததால் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். 50 வயதுடைய அந்த நபர் பண்டார் கின்ராராவில் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அய்டில் பொல்ஹசான் ( Aidil Bolhassan ) தெரிவித்தார்.
வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவரை வேனிலிருந்து தூக்கி வீசியதை அந்த சந்தேகப் பேர்வழி விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் அவரது கணவரால் வேனிலிருந்து தள்ளப்பட்டாரா அல்லது தாமாகவே குதித்ததால் இறந்தாரா என்பது குறித்து விசாரணையில் போலீஸ் கவனம் செலுத்தி வருகிறது. அந்த சந்தேகப் பேர்வழியும் இறந்த பெண்ணும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டதோடு அவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
சந்தேக நபர் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார் என்பது அவரது சிறுநீரில் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதோடு தனது மனைவியும் Methaphetamine போதைப் பொருளை தவறாக பயன்படுத்தி வந்திருப்பதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.
நேற்று பிற்பகல் மணி 2.35 அளவில் நடைபெற்ற அந்த சம்பவத்தில் வேனிலிருந்து பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டதோடு, அந்த வேன் ஓட்டுனர் கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து சென்றதை கண்டதாக ஆடவர் ஒருவரிடமிருந்து போலீசார் புகாரை பெற்றனர்.
44 வயதுடைய அந்த பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து தண்டனைச் சட்டத்தின் 304 A விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.