
புது டெல்லி, மே-11 – இந்தியாவும் – பாகிஸ்தானும் உடனடி முழு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஒரு நாள் இரவு முழுக்க அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நடத்திய பேச்சுவார்த்தையில் அதற்கு இணக்கம் காணப்பட்டன; அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் என டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில், உடனடி போர் நிறுத்தத்தை உறுதிச் செய்தார்.
பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் தெற்காசிய வட்டார ஒற்றுமை பாதிக்காத வகையில், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டிட பாடுபடுவோம் என்றார் அவர்.
இந்தியா சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது;
முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு பாகிஸ்தான் இராணுவத் தரப்பிலிருந்து தொடர்புகொண்டு பேசிய போது, தரை வழி, கடல் வழி, வான் வழி என அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
அடுத்தக்கக் கட்ட பேச்சுவார்த்தை நாளை நண்பகல் நடைபெறவிருக்கின்றது.
அமெரிக்கா செய்து வைத்த பஞ்சாயத்தால், இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் 4 நாட்களாக நீடித்த கனரக ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளன.
பரம வைரிகளான அவ்விரு அண்டை நாடுகளும் அடுத்து அணு ஆயுதத்தை கையிலெடுக்கக் கூடுமென நிலவிய கலக்கமும், பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி 26 பேரை கொன்றதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
அத்தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசே இருப்பதாகக் குற்றம் சாட்டிய இந்தியா, சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் 9 இடங்களைக் குறி வைத்து ஏவுகணைகளால் தாக்கி பயங்கரவாதிகளின் முகாம்களைத் தரைமட்டமாக்கியது.
பதிலுக்கு பாகிஸ்தானும் 15 இந்திய நகரங்களில் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு தரப்பிலுமே மொத்தமாக 66 பொது மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியியிருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், இந்தியாவும் வேறு வழியின்றி பதிலடி கொடுப்பதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், இனி எந்த விளைவுகளுக்கும் பாகிஸ்தானே பொறுப்பு என்றார்.