
கோலாலம்பூர், மே-11 – இந்தியா – பாகிஸ்தான் போரில் மலேசியா உள்ளிட்ட முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தான் பக்கமே நிற்க வேண்டும்.
இஸ்லாமிய சகோதர நாடு என்பதால் பாகிஸ்தான் பக்கம் நிற்பதே உத்தமம் என, Mohd Asri Zainul Abidin அல்லது Dr Maza என பரவலாக அழைக்கப்படும் பெர்லிஸ் முஃப்தி கூறியுள்ளார்.
எனினும், அதற்கு அவர் முன்வைத்துள்ள காரணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இந்தியா என்றுமே முஸ்லீம்களுக்கு எதிரான நாடு என்பதை நிரூபித்து வருகிறது; மசூதியை இடிப்பது, முஸ்லீம் பெண்களை கற்பழிப்பது, மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லீம்களை அடித்துக் கொல்வது ஆகியவை இந்தியாவுக்கு கை வந்த கலை என, Mazza கடுமையான குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார்.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வந்ததிலிருந்து, அங்குள்ள முஸ்லீம்கள் மீது பல்வேறு கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
பெயருக்கு தான் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கின்றனர்; ஆனால் இந்து அரசாங்கத்தால் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
போதாக் குறைக்கு, முஸ்லீம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட காஷ்மீரின் ஒரு பகுதியையும் இந்தியா ஆக்கிரமிப்பு செய்கிறது.
ஆக, இந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கு அரசியல் ஆய்வாளர்களும், வரலாற்று நிபுணர்களும் என்னதான் காரணங்களை அடுக்கினாலும், பாகிஸ்தான் பக்கமே நியாயம் உண்டு.
எந்தச் சூழலிலும் முஸ்லீம் நாடான பாகிஸ்தானை, மற்ற முஸ்லீம் நாடுகள் விட்டுக் கொடுக்கக் கூடாது என, Dr Maza சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அஹ்மெட் இல்யாசி இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போரில், ஒட்டு மொத்த இந்தியர்களும் மோடி அரசாங்கத்தின் பின்னால் அணி திரள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
ஜும்மா தொழுகையின் போது, நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் மசூதிகளில் பாகிஸ்தானையும் அதன் மூலம் பிரச்சாரம் செய்யப்படும் பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பயங்கரவாதத்தை அதன் வேர்களிலிருந்தே முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என இமாம் உமர் கூறியுள்ளார்.
இருவருமே முஸ்லீம்கள் தான், ஒருவர் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர், இன்னொருவர் சம்பந்தமில்லாத நாட்டில் அதுவும் தொலைத் தூரத்தில் இருப்பவர்.
சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்தவரே பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவை ஆதரிக்கிறார்; இன்னொருவர் மத ரீதியாக பாகிஸ்தானை ஆதரிக்கிறார்.
இருவர் பேசிய வீடியோக்களும் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளன.