
கோலாலம்பூர், மே-13 – ஒரு கணவன் மனைவிக்கு காயம் விளைவிக்கும் அளவுக்கு ஆபத்தாக வாகனமோட்டியக் குற்றத்தை, கார் உபரிப் பாகங்களை விற்கும் முகவரான கே.தர்மராஜு என்பவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 1 மாத சிறைத் தண்டனையும், 12,000 ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கைதான நாளான மே 11-ரிலிருந்து சிறைத் தண்டனை தொடங்கும்.
அதே சமயம், 5 ஆண்டுகளுக்கு வாகனமோட்டும் உரிமத்தை வைத்திருக்கும், அல்லது புதிதாக விண்ணப்பிக்கும் தகுதியை தர்மராஜு இழந்திருப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.
மே 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டூத்தா டோல் சாவடிக்கு முன்பாக, மாநகரை நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையில், அவரோட்டிச் சென்ற Nissan Navara பிக்கப் லாரி, மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை மோதியது.
விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அந்த பிக்கப் லாரி ஓட்டம் பிடித்தது, dash cam கேமராவில் பதிவாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அவ்விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டியான கணவருக்கு கழுத்து எலும்பு முறிந்து, கணுக்காலில் காயமேற்பட்டது.
பின்னால் அமர்ந்து சென்ற மனைவிக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதுடன், விலா எலும்பும் கணுக்காலும் முறிந்தன.