
புத்ராஜெயா, மே-14 – ரஷ்யாவைச் சேர்ந்த InDrive, Maxim ஆகிய 2 e-hailing நிறுவனங்களின் செயலிகளை முடக்கக் கோரும் விண்ணப்பம் எதனையும், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூக ஆணையமான MCMC இன்னும் பெறவில்லை.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனை உறுதிப்படுத்தினார்.
ஒருவேளை அதற்கான விண்ணப்பம் கிடைக்கப் பெற்றால், சட்டத்திற்குட்பட்டு MCMC அதனைச் செயல்படுத்துமென்றார் அவர்.
வரும் ஜூலை 24-ஆம் தேதியோடு சேவையை நிறுத்துமாறு InDrive, Maxim இரண்டும் போக்குவரத்து அமைச்சால் உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து கேட்ட போது ஃபாஹ்மி அவ்வாறு சொன்னார்.
நடப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமால் தொடர்ந்து இயங்கி வருவதால், அவ்விரு நிறுவனங்கள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலேசிய P-hailing சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.
மலேசிய சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப தனது ஓட்டுநர்கள் PSV உரிமம் வைத்திருப்பதை அவை உறுதிச் செய்யவில்லை என்ற புகார்களும் அதிலடங்கும்.
எனவே, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மலேசியாவில் அவற்றின் செயலிகள் முடக்கப்பட வேண்டுமென்றும் அச்சங்கம் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது