
லாஸ் ஏஞ்சல்ஸ், மே-16 – 2028 ஒலிம்பிக் போட்டிகளின் போது, பார்வையாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வானில் பறந்து நகரத்தின் மோசமான போக்குவரத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவான LA28, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் போது விமான டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளதே அதற்குக் காரணம்.
இரசிகர்களை, போட்டி நடைபெறும் அரங்குகளுக்கு அழைத்துச் சென்று வரும் வகையில், Archer Aviation நிறுவனத்துடன் அந்த ஒத்துழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் டாக்சிகளின் பயன்பாடு, ஒரு நீண்ட கால கனவாக இருந்து வருகின்றது.
அது 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போதே அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால் அதற்கு குறித்த நேரத்தில் ஐரோப்பாவின் விமானப் பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை.
ஒருவேளை, 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைத்தால், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த விமான டாக்சிகள் 10-20 நிமிட பயணங்களை வழங்கும்.
பல பெரிய ஒலிம்பிக் அரங்குகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு இடையில் அவை பறக்கும்.
என்றாலும், ஒவ்வொரு பயணத்திற்கும் எவ்வளவு செலவாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.