
கோலாலம்பூர், மே 28 – PKR துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரபிஸி ரம்லி பதவி விலகல் குறித்து இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படுத்தவில்லையென அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் பாமி பாட்ஸில் ( Fahmi Fadzil ) தெரிவித்துள்ளார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாமி , தனது கருத்துக்களை சுருக்கமாகத் தெரிவித்து, நடந்து வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கவனம் செலுத்தினார்.
உச்ச நிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. இன்றுத்தான் இரண்டாவது நாள் என அவர் கூறினார். ரபிஸி பதவி விலகல் குறித்து வேறு தகவல்கள் எதுவும் இல்லை. நாம் அனைவரும் இது குறித்து காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். ரபிஸியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வினவப்பட்டபோது பாமி இதனைத் தெரிவித்தார். கட்சித் தேர்தலில் தாம் தோல்வி கண்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதாக இதற்கு முன் ரபிஸி கூறியிருந்தாலும் 46 ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டத்தில் பொருளாதார அமைச்சரான ரபிஸி இன்று கலந்து கொண்டார் . கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் நுருல் இஷாவிடம் நேரடி போட்டியில் பண்டான் எம்.பி.யான ரபிஸி ரம்லி 3,866 வாக்குளைப் பெற்று தோல்வி கண்ட வேளையில் , நுருல் இஷா 9,803 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.