
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இருவரும் விடுமுறையில் சென்றிருக்கிறார்கள்; விடுமுறையில் சென்றவர்களின் இடத்தை எப்படி நிரப்ப முடியுமென, அவர் கேட்டார். பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடலுக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறியதால், அமைச்சராக இருக்கும் தார்மீக உரிமையை தாம் இழந்திருப்பதாகக் கூறி, டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அறிவித்தார்.
நேற்று முதல் விடுமுறையில் செல்வதாகவும், ஜூன் 17-ஆம் தேதி பதவி விலகல் நடப்புக்கு வருமென்றும் ரஃபிசி கூறியிருந்தார்.
அதே போல், உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த நிக் நஸ்மி நிக் அஹ்மாட், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் பதவித் துறப்பு ஜூலை 4-ஆம் தேதி அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டது.
எனினும், நேற்று வெளியிட்ட அறிக்கையில், அவ்விருவரின் விடுமுறையை தாம் அங்கீகரித்திருப்பதாகவும், மற்ற விஷயங்கள் பற்றி பின்னர் முடிவெடுக்கப்படுமென்றும் பிரதமர் கூறியிருந்தார்.