Latestமலேசியா

அரசாங்க நிலங்களில் புதியக் கோயில்களைக் கட்ட அனுமதியில்லையா?; பேராக் அரசின் முடிவுக்கு மக்கள் சக்தி தனேந்திரன் எதிர்ப்பு

ஈப்போ, ஜூன்-6 – அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்க நிலங்களில் எந்தவொரு புதியக் கோயில் நிர்மாணிப்புக்கான விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படாது என்ற பேராக் அரசின் முடிவுக்கு, மலேசிய மக்கள் சக்தி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இம்முடிவு பெருத்த ஏமாற்றம் தருவதோடு, பேராக்கில் உள்ள இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியாகவும் பாகுபாடாகவும் உள்ளது என, அக்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

இந்த உத்தரவின் மூலம் பேராக் அரசு சொல்ல வரும் செய்தி என்ன என்பது தமக்கு விளங்கவில்லை என அவர் சொன்னார்; மாநில மேம்பாட்டில் இந்துக்களுக்கும் அவர்களின் கலாச்சார அம்சங்களுக்கும் இடமில்லையா? இந்தியர்களின் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் அரசாங்கம் செய்யும் கைமாறு இதுதானா என தனேந்திரன் காட்டாமாக கேள்வி எழுப்பினார்.

இப்புதிய உத்தரவு இந்துக்கள் மத்தியில் மேலும் கவலையையும் கோபத்தையும் உண்டாக்குமென என எச்சரித்த தனேந்திரன், வெளியிட்ட சுற்றறிக்கையை மாரில அரசு மீட்டுக் கொள்ள வேண்டுமென்றார்.

அதே சமயம், நீண்ட காலமாக அரசாங்க நிலங்களில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்களை அடையாளம் கண்டு, அவற்றை அங்கீகரிப்பதோடு சட்டப்பூர்வ தீர்வுகளை வழங்க வேண்டும்.

தவிர, இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் எந்தவோர் இறுதி முடிவையும் அறிவிக்கும் முன்னர், இந்து அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள், வரலாற்று நிபுணர்கள் போன்ற தரப்புகளை அழைத்து கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

பேராக் மாநில நில மற்றும் கனிம வள இயக்குநரின் சுற்றறிக்கையில் அவ்வுத்தரவு இடம்பெற்றிருப்பதாக, மனிதவளம், இந்தியச் சமூக விவகாரம் மற்றும் மாநில ஒருமைப்பாட்டு துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

“கோயில் கட்ட விரும்புவர்கள் சொந்தமாக நிலத்தை வாங்கி, ஊராட்சி மன்றங்களின் அனுமதியைப் பெற்று கட்டிக் கொள்ளலாம்; ஆனால் அது அரசாங்க நிலங்களை உட்படுத்தியிருந்தால் உடனடியாக நடவடிக்கைப் பாயும்” என்றார் அவர்.

இதன் மூலம், பதிவுப் பெறாமல் அரசு நிலங்களில் கோயில்கள் நிர்மாணிக்கப்படும் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பேராக்கில் தற்போது 480 பதிவுப் பெற்ற இந்து ஆலயங்கள் உள்ளன; இவ்வெண்ணிக்கையானது சீனக் கோயில்கள் மற்றும் தேவாலங்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!