
தோக்யோ, ஜூன்-7 – பிளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களுக்கு அத்தியாவசிமானதென்றாலும், அவை எளிதாக மட்குவதில்லை என்ற பிரச்னை நீண்ட காலமாகவே நீடிக்கிறது.
குறிப்பாக கடலில் கலக்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளாக அப்படியே குப்பைகளாக அவை மிதக்கின்றன.
அவற்றை உணவு என்றெண்ணி உண்டு கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறன.
இந்நிலையில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் இதற்கொருத் தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது கடலில் போட்டால் சில மணி நேரங்களிலேயே கரைந்துபோகும் தன்மைகொண்ட புதிய பிளாஸ்டிக்கை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதை செய்முறையாக காட்ட ஏதுவாக, உப்புநீர் கலக்கப்பட்ட ஒரு பாத்திரத்தில் சிறிய பிளாஸ்டிக் துண்டை அவர்கள் போட, சுமார் ஒரு மணி நேரத்தில் மொத்த பிளாஸ்டிக்கும் கரைந்துபோனது.
இது வழக்கமான பிளாஸ்டிக்குகளைப் போலவே வலிமையானது; ஆனால் உப்பு நீரில் படும் போது மட்டும் உடைந்து கரைந்துபோகும்.
இப்புது வகை பிளாஸ்டிக் நச்சுத்தன்மையற்றது, தீப்பிடிக்காது என்பதோடு கரியமிலவாயுவை வெளியேற்றாது என தோக்யோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தூய்மைக்கேட்டு பிரச்னைக்கு இது சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
என்றாலும் இக்கண்டுபிடிப்பை வணிகப்படுத்தும் நிலைக்கு கொண்டுச் செல்வது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.