
கோலாலம்பூர், ஜூன் 19 – மலேசிய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் குறித்து விவாதிக்க வாஷிங்டனில் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். நேற்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ( Howard Lutnic ) உடனான சந்திப்பிற்குப் பிறகு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஷப்ருல் அஜிஸ் (Tengku Zafrul Aziz ) மற்றும் இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் ( Amir Hamzah Azizan ) ஆகியோரிடமிருந்து நேர்மறையான தகவல்களை பெற்றதாக அன்வார் கூறினார்.
அவர்களிடமிருந்து எனக்கு குறுஞ்செய்திகள் கிடைத்தன. அவர்களது சந்திப்பு சந்திப்பு சிறப்பாக இருந்ததாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாக 38வது ஆசிய பசிபிக் வட்டமேசையில் முக்கிய உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார். மலேசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறித்த பேச்சுக்களை தொடர தெங்கு ஷப்ருல் நேற்று வாஷிங்டனுக்குப் பயணமானார்.
தற்போதைய 24 விழுக்காடு வரி விகிதத்தைக் குறைப்பது, வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைப்பது ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று அவர் இதற்கு முன்பு கூறியிருந்தார். ஜூலை 8 ஆம் தேதி 90 நாள் இடைநிறுத்தம் முடிவடைவதற்கு முன்பு ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் அமெரிக்காவிற்கான மலேசிய ஏற்றுமதிகள் 24 விழுக்காடு வரியை எதிர்கொள்ள வேண்டும்.