
கோலாலம்பூர், ஜூன் 23 – ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுவிப்பாளரான பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் M. தம்பிராஜா அவர்கள் காலமானார். 1942 ஆம்ஆண்டு ஆண்டு பிறந்த 82 வயதான அவர் இன்று காலையில் இறந்தார். மலயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் சில நாட்களாக உடல் நலமின்றி இருந்தாக தெரிகிறது.
அவர் 1982 ஆம் ஆண்டு தனது நண்பர்கள் மற்றும் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்களின் உதவியோடு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை தோற்றுவித்து நாடு முழுவதிலும் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக டியூசன் மையங்களை நடத்தி தனது இறுதி மூச்சுவரை கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றியுள்ளார். எஸ்.டி.பி .எம் மாணவர்கள் மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களுக்கான வரலாற்று பாட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
கல்விச் சேவையில் அவர் ஆற்றிய பங்கிற்காக டத்தோ, மற்றும் டான்ஸ்ரீ விருதுகளை அரசாங்கம் வழங்கி கௌரவித்துள்ளதோடு இந்திய அதிபரிடமிருந்து பரவாசி பாரதீய சம்மன் விருதையும் பெற்றுள்ளார். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தொடர்ந்து கல்வித்துறையில் பல்வேறு ஆய்வுகளுக்காக 5 பி.எச்.டி பட்டங்களை பெற்றவருமான அவர் சட்டத்துறையிலும் பட்டம் பெற்று வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு கல்வித்துறைக்கு பெரும் இழப்பு என அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வி நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு அறிமுகமான நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தனிப்பட்டவர்கள் நாளை ஜூன் 24 ஆம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஸ்ரீ முருகன் ஆசிரமத்தில் No 40 , SMC Ashramam , 11/2, 46200. Petaling Jaya, Selangor என்ற முகவரியில் அஞ்சலியை செலுத்தலாம். அவரது இறுதிச் சடங்கு Nirwan Setia Alam மில் மாலை 3 மணியளவில் நடைபெறும் என ஸ்ரீ முருகன் நிலையத்தின் இயக்குனரான் சுரேய்ன் கந்தா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.