
குண்டூர், ஜூன்-23 – தென்னிந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூரில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி, அவரின் YSR காங்கிரஸ் கட்சித் தொண்டர் உயிரிழந்தார்.
காரில் கையசைத்த படி ஜெகன் மோகன் பேரணியாகச் சென்ற போது அத்துயரம் நிகழ்ந்தது.
ஜெகன் மோகனின் காரை பூத்தூவி வரவேற்கும் போது கூட்ட நெரிசலில் தடுக்கி விழுந்த 55 வயது அவ்வாடவரின் தலை, கார் டயருக்கு அடியில் சிக்கி நசுங்கியது.
குண்டூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்படும் வழியிலேயே அத்தொண்டரின் உயிர் பிரிந்தது.
ஜெகன் மோகனின் காரில் ஏற முயன்று போது அவர் தவறி விழுந்ததாகவே முதலில் கருதப்பட்டது.
எனினும், ஜெகன் மோகன் சென்ற காரில் அவரின் தலை சிக்குண்ட கோரமான காட்சிகள் இணையத்தில் வைரலானதால், போலீஸ் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என YSR கட்சியினர் கூறி வருகின்றனர்.
கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.