
கோலாலம்பூர், ஜூன்-27 – 2025 மருத்துவ விதிமுறைகள் சட்டத்திருத்தம் வரும் ஜூலை 1-ஆம் தேதி அமுலுக்கு வரவிருப்பது, நாட்டின் சுகாதாரத் துறையின் ஒரு முக்கியத் தருணமாகும்.
செனட்டர் Dr லிங்கேஷ் ஆர் அருணாச்சலம் அவ்வாறு வருணித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரத் துறையின் வலுவான எதிர்காலத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவன் என்ற முறையில், நாடாளுமன்றத்தில் தொடங்கிய முயற்சி இன்று செயல்வடிவம் கண்டிருப்பது கண்டு தமக்கு உள்ளபடியே மகிழ்ச்சி என அவர் சொன்னார்.
வெளிநாட்டு மருத்துவ நிபுணத்துவ பட்டப்படிப்புக்கு இணையான parallel pathway பயிற்சித் திட்டம் குறித்து மேலவையில் பல முறை தாம் பேசியிருப்பதையும் இவ்வேளையில் லிங்கேஷ் நினைவுக் கூர்ந்தார்.
தற்போது சட்டத் திருத்தம் அமுலுக்கு வருவதால், இது வருங்கால மருத்துவ நிபுணர்களின் வெற்றி மட்டுமல்ல, சுகாதாரத் துறையின் உண்மையான சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.
கல்வி, தொழில்முறை பயிற்சிகள், மற்றும் பொதுச் சேவைக் கொள்கைகளில் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை தொடர்ந்து வலியுறுத்தி வரும் DAP மற்றும் மடானி அரசாங்கத்திற்கும் இது தனிப்பட்ட வெற்றியே என்றார் அவர்.
இந்தச் சட்டத்திருத்தத்தை சாத்தியமாக்கிய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் முயற்சி ஒரு நீண்ட நெடியப் பயணமாகும்.
ஆனால் அதில் இன்று ஒரு முக்கிய அடியை நாம் எடுத்து வைத்துள்ளோம் என Dr லிங்கேஷ் பெருமிதம் தெரிவித்தார்