
ஜாசின், ஜூன்-28 – மலாக்கா, ஜாசின் அருகே PLUS நெடுஞ்சாலையில் திடீரென MPV-யின் டயர் வெடித்ததில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
நேற்று காலை 8 மணிக்கு இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக, ஜாசின் போலீஸ் கூறியது.
Toyota Vellfire-ரின் டயர் வெடித்து அவ்வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இரும்புத் தடுப்பை மோதியது.
இதனால் எதிர் திசை சாலையில் தூக்கி வீசப்பட்ட Iris Sofea Mohamed Siddiq Khan, அவ்வழியே வந்த Honda City காரால் மோதப்பட்டாள்.
5 பிள்ளைகளில் மூத்தவரான அச்சிறுமி, தலையில் பலத்த காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.
மொத்தம் 9 பேருடன் அச்சிறுமியின் தந்தை கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு செல்லும் வழியில் அவ்விபத்து ஏற்பட்டது.
Iris Sofea-வின் தந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை; எனினும் MPV-யிலிருந்த மற்ற 7 பேரும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகி ஜாசின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Honda City காரோட்டியான 30 வயது பெண்ணுக்கும் அதில் காயங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது