
கோத்தா பாரு, ஜூன் 29- வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டுமென்று சாலைப் போக்குவரத்துத் துறை(JPJ) அறிவித்துள்ளது.
ஜனவரி 2020 க்குப் பிறகு வெளிவந்த பேருந்துகளுக்கு இந்த அமலாக்கம் பொருந்தும் என்றும், 2020 க்கு முன்பு வெளிவந்த பேருந்துகளுக்கு சீட் பெல்ட்களை பொருத்த ஒரு குறிப்பிட்ட கால வரைவு வழங்கப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) இயக்குநர் ஜெனரல் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி கூறியுள்ளார்.
பேருந்து நகரும் முன் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை அணிவதை ஓட்டுநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதவர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஓட்டுநர் பயணியை எச்சரித்திருந்தாலும், பயணி சீட் பெல்ட் அணிய மறுத்தால், பயணிக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும் என்றும், எச்சரிக்கை உண்மையிலேயே விடுக்கப்பட்டதா என்று சிசிடிவி கேமராக்களை ஆராவோம் என்றும் ஏடி ஃபாட்லி கூறியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து பேருந்து இயக்க நிறுவனங்களும் பயணிகளும் நிர்ணயிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் இந்த அமலாகாத்தின் வழி பெருகி வரும் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க இயலுமென்றும் எதிர்பார்க்கிப்படுகின்றது.