
கோலாலம்பூர், செப்டம்பர்-23,
கோலாலம்பூர் நேற்று மாலை பலத்த புயல் காற்றால் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக லெம்பா பந்தாய், ஸ்ரீ செம்பாகா PPR குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒரு புளோக் கட்டடத்தின் கூரை பறந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன.
30 வாகனங்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும்
தொடர்புத் துறை அமைச்சருமான டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், 4 வீடுகள் கடுமையாக சேதமடைந்ததாகக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு RM5,000 ரிங்கிட் நிதியுதவி, படுக்கை, தலையணை, பள்ளி உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
அவர்கள் காலியாக உள்ள யூனிட்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
நீர் ஒழுகியது மற்றும் கண்ணாடிகள் பறந்ததால் புளோக் E மற்றும் F கட்டடங்களின் கட்டமைப்பு பாதுகாப்பை மறுஆய்வு செய்யுமாறு, DBKL மற்றும் தீயணைப்பு-மீட்புத் துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
கண்ணாடி துண்டுகள் பறந்ததில் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வேளையில், நேற்றைய புயலில் Dewan Gasing Indah மண்டபத்தில் சிறிய தீ விபத்தும் ஏற்பட்டது.
தவிர, தலைநகர் முழுவதும் 17-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன.
இதனால் பங்சார், செப்பூத்தே, வங்சா மாஜு, பண்டார் துன் ரசாக் உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.