
செர்டாங், செப்டம்பர்-28,
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கி வந்த 7 உடம்புபிடி மையங்களில் குடிநுழைவுத் துறை நடத்திய ‘Ops Gegar’ சோதனைகளில், அங்கு ஒழுங்கீனச் சேவைகள் வழங்கப்பட்டு வந்தது அம்பலமானது.
இதையடுத்து மொத்தம் 86 வெளிநாட்டவர்கள் கைதாகினர்; அவர்களில் 21 முதல் 32 வயதுடைய 76 பெண்களும் அடங்குவர்.
அவர்களில் 38 பேர் தாய்லாந்து பிரஜைகள், 21 இந்தோனேசியர்கள், 13 மியன்மார் நாட்டவர்கள், 8 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள், நால்வர் கம்போடியர்கள் மற்றும் இருவர் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சிலர் போலியான அல்லது காலாவதியான ஆவணங்களுடன் இருந்ததோடு, விசா விதிமுறைகளையும் மீறியிருந்தனர்.
இரு வாரங்களாக இரகசியமாக கண்காணித்து நேற்று மாலை கோலாலம்பூர், ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் காஜாங்கில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அம்மையங்கள், உடம்புபிடி சேவைகளுடன், கூடுதலாக RM200 முதல் RM250 வரை வசூலித்து ஒழுங்கீனச் சேவைகளையும் வழங்கியுள்ளன.
குடிநுழைவுச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.