
சென்னை, நவம்பர்-6,
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் உலகநாயகன் கமல்ஹாசனும் மீண்டும் இணையும் படம் உறுதியாகியுள்ளது.
#Thalaivar173 என தற்போதைக்குப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை இயக்குநர் சுந்தர். சி இயக்க, கமஹாசனே அதனைத் தயாரிக்கிறார்.
அவரின் Rajkamal International நிறுவனம் வாயிலாக நேற்று அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தங்கள் இருவரின் 50 ஆண்டு கால இணைப்பிரியா நட்பை பறைசாற்றும் வகையில், இப்படம் அமைவதாக தனக்கே உரிய பாணியில் ரஜினிகாந்துக்கு கடிதமொன்றையும் கமஹாசன் எழுதியுள்ளது வைரலாகியுள்ளது.
2027 பொங்கலுக்கு அப்படம் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்திய சினிமா இரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும் ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமே நடிப்பது உறுதியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பாரா? அல்லது கௌரவ தோற்றத்தில் தோன்றுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
லோகேஷ் கனகராஜ், நெல்சன் என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசியில் சுந்தர்.சி-க்கு படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சுந்தர்.சி 1997-ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றான அருணாச்சலத்தை இயக்கியவர்.
தற்போது சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர்.



