
அலோர் காஜா, ஜூலை.10 – மலாக்காவில் உள்ள பள்ளிகளில் உலோகங்களைக் கண்டறியும் கருவிகளைக் கொண்டு திடீர் சோதனைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு கூர்மையான பொருட்களைக் கொண்டு வருவதற்கான தடை கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என மாநில கல்வித்துறை தெரிவித்தது. அதோடு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு இவ்விதிமுறைகள் தொடர்ந்து நினைவூட்டப்படும் என்றும் அது கூறியது. மலாக்காவில் நேற்று முதலாம் படிவ மாணவர் ஒருவர் பாக்ஸ் கட்டர் எனும் சிறிய ரகக் கத்தியுடன் சக மாணவர்களைத் துரத்திய சம்பவத்தை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்படும் எந்தவொரு மாணவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறை எச்சரித்தது. சிகிச்சை பெறுபவர்கள் அல்லது உளவியல் சமூக ஆதரவு தேவைப்படுவோர் உட்பட, மாணவர்களின் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத் தேவைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தப்படும். ஆரோக்கியமான மனத் திட்டம் போன்றவையும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என அத்துறை மேலும் கூறியது.
நேற்றைய சம்பவத்தில் தம் மீது மீண்டும் மீண்டும் பனிக்கட்டிகள் வீசப்பட்டதால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் 13 வயது மாணவர் தனது பென்சில் பெட்டியில் இருந்து ஒரு பாக்ஸ் கட்டரை எடுத்து, சுமார் 50 மீட்டர் தூரம் வரை சக மாணவர்களைத் துரத்தினார். பின்னர் அம்மாணவர் சமாதானப்படுத்தப்பட்டார். அச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுகிறது.



