2026 முதல் நடுநிலைப் பள்ளிகளில் கைப்பேசி & ‘Smart Watch’-க்கு தடை – சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர், டிசம்பர் 1 – வருகின்ற ஜனவரி 2026 முதல் நாட்டின் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்கள் பள்ளி நேரம் முழுவதும் கைப்பேசி மற்றும் ‘Smart Watch’-ஐ பயன்படுத்துவதற்கு சிங்கப்பூர் அரசு முழுத் தடை விதித்துள்ளது.
தற்போது வகுப்பு நேரத்தில் மட்டுமே கைப்பேசி மற்றும் ‘Smart Watch’-ஐ மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை அமலில் இருந்து வந்துள்ளது. ஆனால் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் 2026 – முதல் பள்ளி நேரம் முழுவதும் அதாவது, ஓய்வு நேரம், கூடுதல் வகுப்பு நேரங்களின் போது கூட மாணவர்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை, மாணவர்களிடையே ஆரோக்கியமான திரை நேரம் அதாவது ‘Healthier screen habits’ பழக்கங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் முன்னதாகவே அமல்படுத்தப்பட்டு வந்த இந்நடைமுறையினால் மாணவர்களிடையே நல்ல முன்னேற்றத்தைக் கண்டறிந்ததாக சில பள்ளிகள் தெரிவித்திருந்தன.
அதே நேரத்தில் வீட்டில் மாணவர்களின் போதிய உறக்கம் மற்றும் இதர நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அதற்கேற்ப அவர்களின் சாதனங்களை அமைத்து கொள்ள வேண்டுமெனவும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டது.



