
கோலாலம்பூர், டிசம்பர் 11 – தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றத்தின் காரணமாக, கம்போடியாவிலிருக்கும் மலேசியர்கள் எல்லை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கம்போடியாவின் முக்கிய பகுதிகளான Preah Vihear, Oddar Meanchey, Banteay Meanchey, Battambang மற்றும் Pursat ஆகிய இடங்களுக்குப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் மலேசியர்கள் அங்குள்ள உண்மை நிலைமையைக் கண்டறிந்து, உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டுமெனவும், அதே வேளை ஏதேனும் அவசர உதவி தேவை பட்டால் மலேசிய தூதரகத்தை உடனடியாக தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.
கம்போடியா தாய்லாந்து எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்தாலும், இந்த ஆண்டு ஜூலையில் அது மீண்டும் தீவிரமாகி ஐந்து நாட்களுக்கு தொடர் மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சமாதானத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னரும் கடந்த திங்கட்கிழமை மீண்டும் மோதல் வெடித்து, உயிர்சேதமும் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.



