
கோலாலம்பூர், டிசம்பர் 18 – தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி திட்டத்தில் மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக இன்று 16/12/25 பள்ளியில் நடந்தது.


விழாவின் சிறப்பு வருகையாளராக பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் இடைநிலை & படிவம் 6 க்கான உதவி அதிகாரியுமான மதிப்புமிகு குஹானிஸ் பிந்தி முகமட் சைன் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.
அவர் தமதுரையில் அனைத்து பள்ளிகளும் மூலிகைத் தாவரங்களின் மகிமையைப் போற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.


மாணவர்கள் வகுப்பறைக் கற்றல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டால் போதாது ,மாறாக வாழ்வியல் தொடர்பான பயலுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

ஆண்டு இறுதியில் மாணவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டிட எப்பிங்காம் ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குறியது. பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் வீ. சுகுணவதி அவர்கள் தமது சிறப்புரையில் ஆண்டு இறுதியில் பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய இந்நடவடிக்கை எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது என்றார்.


எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளது.அதனை வெளிக்கொணரவே மூலிகைத் தாவரங்களின் மகிமையை ஒட்டி மாணவர்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காய்கறிகள் சாப்பிடுவது என்றால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது.அதனை எவ்வாறு சத்துள்ள உணவாக மாற்றி உண்ணலாம் என்பதை அறிந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குமாரி கார்த்தினா ராமகிருஷ்ணன் அவர்கள் மாணவர்கள் மூலிகைத் தாவரங்கள் அதில் உருவாக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.


ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள் மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது.



