
பாச்சோக், பிப்ரவரி-20-கிளந்தான், பாச்சோக் கடற்கரைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் Portuguese Man O’War எனப்படும் விஷமுள்ள ஒருவகை ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை பந்தாய் இராமா, பந்தாய் மெலாவி, பந்தாய் கண்டிஸ் உள்ளிட்ட பல கடற்கரைகளில் கரைத் தட்டியதை சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களிலும் காண முடிந்தது.
18-ஆம் நூற்றாண்டின் போர்ச்சுகீஸ் போர்க்கப்பல் அதன் முழு பாயைப் பறக்கை விரித்தால் எப்படி இருக்குமோ, அதே போல தோற்றமளிப்பதால், இது Portuguese Man O’War என அழைக்கப்படுகிறது.
இந்த அரிய வகை உயிரினம், பெரும்பாலும் நீலம், ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் துண்டு போல தோற்றமளிப்பதால், குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அதன் ஆபத்தை உணராமல் அதனைத் தொடும் அபாயம் உள்ளது.
ஆனால், மறந்தும் அந்த உயிரினத்தைத் தொட வேண்டாம் என பாச்சோக் மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
அதன் கொட்டுகள் கடுமையான வலியையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதே அதற்குக் காரணம்.
தவிர, அது தோலில் சிவப்பு புண்களை உருவாக்கும். அதன் விஷம், சுவாசக் குழாய் வீக்கம், இதயக் கோளாறு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை தூண்டக்கூடும் என அத்துறை விளக்கியது.



