
குவாந்தான், பிப்ரவரி- 25 – பஹாங் மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் கட்டப்படும் போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று பஹாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா (Al-Sultan Abdullah Sultan Ahmad Shah) கூறியுள்ளார்.
சட்டப்பாதையை பின்பற்றாமல் கட்டிடங்கள் அமைப்பது விதிமுறைகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில் தவறான புரிதலும் பதற்றமும் உருவாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார். சட்டங்கள் ஒழுங்கு, நீதி மற்றும் சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
தெமெர்லோவில் தாமான் புக்கிட் பெண்டேராவில் (Taman Bukit Bendera) அமைந்துள்ள தெங்கு அமீர் இப்ராஹிம் சுல்தான் அப்துல்லா (Tengku Amir Ibrahim Sultan Abdullah) பள்ளிவாசலை திறந்து வைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் சமூக தலைவர்கள் இணைந்து நடைமுறைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், மாநில ஒற்றுமையை பாதுகாக்க மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.



