
மெல்பர்ன், பிப்ரவரி-28-ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் பணியாற்றிய சிங்கப்பூரைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது 910 குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
28 வயது அம்மருத்துவர், மருத்துவமனை ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமலேயே கழிவறைகள் மற்றும் குளியலறைகளில் இரகசியமாக படம் பிடித்ததாகவும் வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்வாடவரின் செயலால் Austin Hospital மற்றும் Royal Melbourne Hospital உள்ளிட்ட 3 முக்கிய மருத்துவமனைகளில் 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூலையில், ஒரு தாதியர் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
உடனடி விசாரணையில் இறங்கிய போலீஸார், பின்னர் சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்தி ஆயிரக்கணக்கான வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளைக் கைப்பற்றினர்.
இச்சம்பவத்திற்குப் பிறகு, அவரது மருத்துவ அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் ஆதாரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வரும் மே மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



