
அம்பாங், மார்ச்-9-மூத்த நகைச்சுவைக் கலைஞர் சத்தியா, தற்போது அம்பாங் மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
62 வயதான அவர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் குழப்பமான நிலையில், பேச முடியாமல் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள், அவரது இடது காலில் ஏற்பட்ட தொற்று பரவாமல் தடுக்க முழங்காலுக்கு மேல் வெட்டும் அறுவை சிகிச்சை அவசியம் என பரிந்துரைத்துள்ளதாக, அவரது மகள் ஆமனி கூறினார்.
வலது காலிலும் கடுமையான வீக்கம் இருக்கும் நிலையில், தற்போது சத்தியா, அம்பாங் மருத்துவமனையின் மஞ்சள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீரிழிவுப் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இடது காலில் முட்டிக்குக் கீழ் துண்டிக்கப்பட்ட சத்தியா, அதன் பின்னர் முறையாக தொடர் சிகிச்சைகளையும் மருந்து மாத்திரைகளையும் உட்கொண்டு வந்துள்ளார்.
அப்படியிருந்தும் தற்போது அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
உள்ளூர் சின்னத் திரையிலும் வெள்ளித் திரையிலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்வை நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த சத்தியாவின் இந்நிலை, குடும்பத்தாரையும் இரசிகர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.



