
ஆராவ், மார்ச்-10-ICP எனப்படும் அனைத்துலக சுழற்சி பெர்மிட் இல்லாமல் இனி தாய்லாந்து வாகனங்கள் எதுவும் மலேசியாவுக்குள் நுழைய முடியாது.
ICP இல்லாத வாகனங்கள் எல்லையிலிருந்து 2 கிலோ மீட்டருக்கு மேல் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ எச்சரித்துள்ளது.
வரும் நோன்புப் பெருநாளை ஒட்டி, அந்த அண்டை நாட்டிலிருந்து ஏராளமான வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த நினைவூட்டல் விடுக்கப்படுவதாக JPJ தலைமை இயக்குநர் டத்தோ Aedy Fadly Ramli தெரிவித்தார்.
90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த ICP பெர்மிட் JPJ எல்லைச் சாவடிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது; எனவே தனியார் வாகனங்கள் அதனை மறவாமல் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நடவடிக்கை, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத நுழைவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.



