
கோலாலாம்பூர், மார்ச்-30-சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, பேராக், தஞ்சோங் மாலிமில் EV உபரிப் பாகங்களை பொருத்தும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மறுஆய்வு செய்யக் கூடும் .
முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI விதித்த கடுமையான நிபந்தனைகளுடன் BYD இணங்காததே அதற்குக் காரணம் என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி, The Edge பத்திரிகையிடம் தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்தியிலிருந்து 80% வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும், மீதமுள்ள 20% வாகனங்கள் மலேசியாவில் விற்கப்படும் போது, ஒவ்வொரு யூனிட்டின் விலையும் RM200,000-க்கு மேல் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் அடங்கும்.
“அந்நிய முதலீடுகள் முக்கியம் என்றாலும், நாட்டின் மோட்டார் வாகனத் துறையை பாதுகாக்க வேண்டியதும் அவசியம்”, என்றார் அவர்.
BYD-யின் தயக்கம், மலேசியாவின் EV விரிவாக்கத்தை மந்தமாக்கக் கூடும் என்றாலும், பிற வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து உள்ளே வருகின்றன.
குறிப்பாக, Chery Malaysia நிறுவனம் RM2.2 பில்லியன் மதிப்பிலான EV தொழிற்சாலைத் திட்டத்தை உலு சிலாங்கூரில் முன்னெடுத்து வருவதாக ஜொஹாரி சொன்னார்.
இதனிடையே, தேசியக் கார் தயாரிப்பு நிறுவனங்களான புரோட்டான் ஆண்டுக்கு 150,000 கார்கள், பெரோடுவா ஆண்டுக்கு 350,000 என உள்ளூர் சந்தையில் பெரும் விற்பனையைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாண்டு பிப்ரவரியில் , மலேசிய EV சந்தையில் புரோட்டோன் e.MAS 5 கார்கள் RM57,000 விலையில், 1,802 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
BYD, RM200,000 -க்கும் மேற்பட்ட விலையில் 469 யூனிட்களை விற்றுள்ளது; ஜனவரியில் பூஜ்யமாக இருந்த பெரோடுவா, பிப்ரவரியில் ஒரேயொரு EV காரை விற்றுள்ளதாக, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.



