
ஷா அலாம், – ஏப் 9 -சுபாங் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் 41 பூனைகள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 36 பூனைகள் மிகவும் மெலிந்த நிலையில் பலவீனமாக கூண்டினுள் அடைப்பட்ட நிலையில் காணப்பட்டன.
இறந்த 41 பூனைகளில் 31 பூனைகளின் உடல்கள் பிளாஸ்டிக்காள் சுற்றப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய 10 பூனைகளின் உடல்கள் வீட்டின் வரவேற்பறையிலும் கூண்டிலும் அங்கும் இங்குமாக அழுகிய தோற்றத்தில் சிதறிக் கிடந்தன.
துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, சிலாங்கூர் கால்நடை சேவை துறையின் அதிகாரிகள் மார்ச் 13 ஆம்தேதியன்று மாலை 4 மணியளவில் அந்த குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
அவ்வீடு 49 வயது பெண் ஒருவருக்கு சொந்தமானதாகும்.
மோசமான துர் நாற்றத்துடன் அழுகிய பூனைகளின் சடலங்கள் இருந்ததால் கடுமையான சுகாதார அபாயங்களை அவ்வீட்டின் சூழ்நிலை கொண்டிருந்ததாக சிலாங்கூர் கால்நடைகள் சேவைத்துறையின் இயக்குநர் டாக்டர் ஹசுசனா காலில் ( Hassuzana Khalil) தெரிவித்தார்.
இறந்த பூனைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சலாக் திங்கியில் உள்ள கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
விசாரணையில், சந்தேக நபர் சுமார் ஒரு வருடமாக பூனைகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளதோடு , அந்த பூனைகள் புறக்கணிக்கப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் நம்பப்படுகிறது.



