
ஜாசின், ஏப்ரல்-9-மலாக்கா, ஜாசினில், ‘அல்லாஹ்’ என்ற இஸ்லாமியர்களின் திருச்சொல்லைக் கொண்டிருந்த ஒரு சீனக் கோயில் இன்று மாலை அதிகாரிகளால் இடிக்கப்படுகிறது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Rahmad Mariman அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊராட்சி மன்றத்தின் கண்காணிப்பில், நில உரிமையாளர் அக்கோவிலை உடைப்பார் என்றார் அவர்.
அந்த வழிபாட்டுத் தலத்தின் முகப்பில் இஸ்லாமிய புனிதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டதில், அதன் உரிமையாளருக்கு எந்தச் சம்பந்தமுமில்லை என தெரிய வந்துள்ளது.
என்றாலும், சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய, மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையும் போலீஸும் தொடர்ந்து விசாரணை நடத்துமென Rahman தெரிவித்தார்.
முன்னதாக, அந்தக் சீனக் கோவிலில் ‘அல்லாஹ்’ மற்றும் ‘பிஸ்மில்லாஹ்’ என்ற ஜாவி எழுத்துகள் காணப்பட்டதால் உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Jeti Anjung Batu- Pantai Siring பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், சிவப்பு நிறத்திலான அந்தச் சிறிய சீனக் கோவிலை, முதலில் கவனித்ததாகக் கூறப்படுகிறது.
அக்கோவில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அங்கிருக்கும் நிலையில், இந்த ஜாவி எழுத்துகள் நேற்றிரவு முதலே காணப்பட்டதாகத் தெரிய வருகிறது.



