
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் எரிபொருள் கையிருப்புக் குறித்துப் பொது மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அந்தப் பதிவு அமைந்துள்ளதாக அவ்வாணையம் கூறியது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட நபரின் சிம் அட்டை மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொது மக்களை MCMC எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு அது அறிவுறுத்தியது.
பிலிப்பின்ஸுக்கு சென்ற டீசல், மலேசியா அனுப்பியது அல்ல என அரசாங்கம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.



