
கோலாலம்பூர், ஏப் 27 – விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தின் ஓட்டுநருக்கு RON95 எரிபொருளை விற்பனை செய்தது தொடர்பில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு எதிராக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 26 ஆம்தேதி தனது மின்-புகார் இணையதளம் வழியாக புகார் பெறப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சி.சி.டி.வி பதிவுகளை ஆராய்ந்ததில் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி RON95 எரிபொருளுக்குப் பணம் செலுத்தியது தெரியவந்தது.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தின் டேங்கில் உரிமையாளர் RON95 பெட்ரோலை நிரப்புவது காணப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விநியோக கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை முறை 3 ( 2) இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கொள்முதல் மீதான தடை) (RON95 பெட்ரோல்) 2026-இன் ஒழுங்குமுறையின் கீழ் சந்தேகிக்கப்படும் குற்றங்களுக்காக அந்த பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.



