
சுங்கை பூலோ, ஏப்ரல்-29-சிலாங்கூர், சுங்கை பூலோவில் அமைந்துள்ள மின்சார மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அந்தத் தொழிற்சாலை 80 விழுக்காடு அழிந்துபோனது.
நேற்று மாலை 6.50 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
100-க்கு 300 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்தத் தொழிற்சாலையில் தீ வேகமாகப் பரவியது.
இந்த மீட்புப் பணியில் சுங்கை பூலோ, புக்கிட் ஜெலுத்தோங், டாமான்சாரா, செலாயாங் மற்றும் TTDI நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நல்லவேளையாக விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர் இழப்புகளோ ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சொத்து இழப்புகளின் மதிப்பு குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



