
கோலாலம்பூர், மே 1 – பத்து மலையில் இன்று காலை இரண்டாவது கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி, பக்தி மிகுந்த சூழலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று மே 1ஆம் தேதி காலை 7.40 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவாரப் பாடல்களுடன் ஆன்மீக சூழலில் இந்நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தொடர்ந்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.
பக்தர்கள் அனைவரும் ஒருமித்த மனதுடன் இறை நாமத்தை ஓதியது பக்தி பரவசத்தை மேலும் ரம்யமாக்கியது.
நிகழ்ச்சியின் முக்கியத்துவம், வகுப்புகள் தொடங்கிய விதம் மற்றும் சேவை நோக்கம் குறித்து பத்துமலை திருத்தளத்தின் அரங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவகுமார் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக பத்துமலையில் இலவசமாக நடத்தப்படும் தேவாரம், இசைக்கருவிகள் மற்றும் பரதம் ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இது மாணவர்களின் முயற்சியையும், அவர்களின் ஆன்மீக பயணத்தையும் பாராட்டும் ஒரு சிறப்பு தருணமாக அமைந்தது
மேலும், அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
மொத்தத்தில், இந்த நிகழ்ச்சி பக்தி உணர்வை மட்டுமின்றி, சமய ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நிறைவு பெற்றது.



