
மெக்கா, மே-5-278 மலேசிய ஹஜ் யாத்ரீகர்களுடன் சவூதி அரேபியாவின் ஜெடா நோக்கிச் சென்ற MH8110 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓமான் நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசிய நேரப்படி நேற்று பிற்பகல் 2:06 மணிக்கு KLIA-விலிருந்து புறப்பட்ட இவ்விமானம், இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக ஓமானின் மஸ்கட் அனைத்துல விமான நிலையத்தில் மாலை 4.11 மணியளவில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இருந்த 278 ஹஜ் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களின் குடும்பத்தினர் கவலைப்படத் தேவையில்லை என்றும் Tabung Haji நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
AMAL by Malaysia Airlines நிறுவனம் அந்த விமானத்தை ஆய்வு செய்து வருகிறது.
அந்த விமானமே பயணத்தைத் தொடருமா அல்லது மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



