
மலேசியாவில் சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது, நாடு ஒரு பாதுகாப்பற்ற சூழலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாகப் பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கவலைத் தெரிவித்துள்ளார்.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2021-ல் 594-ஆக இருந்த காணாமல் போன சிறுவர்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,219-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை பதிவான 4,655 சம்பவங்களில், 374 சிறுவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக, பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
“நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த AI காலத்தில், சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் உடனடியாகத் துரித எச்சரிக்கை அமைப்புகளை (Amber Alert) வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பாக 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களே அதிக இலக்காவதால், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யாத நாடு பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும் என சஞ்சீவன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.



