
பேராக்,மே-13 – பெங்கலான் பாரு ( முன்னாள் குளோரி) தமிழ்ப்பள்ளியில் 8-வது ஆண்டு தமிழ்மொழி விழா பள்ளியின் கெமிலாங் அரங்கத்தில் தேசிய கீதம், திருக்குறள் பாடல் இனிதே ஒலிக்க, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, குத்துவிளக்கு ஏற்றி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க தலைவர் திரு.முல்லைச் செல்வன் தலைமையுரை ஆற்றி தொடக்கி வைத்தார். அவ்வுரையில் முதல் முதலில் மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் ஆதரவில் தொடங்கப்பட்ட இவ்விழா தொடர்ந்து எட்டாவது முறையாக இப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் நடத்தி வருவதாக கூறினார்.

பாலர்பள்ளி, முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டுவரை மற்றும் படிவம் ஒன்று முதல் படிவம் 5 வரை மாணவர்கள் இத்தமிழ்மொழி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளி மாணவர்கள் திறன்பட தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த பேருதவியாக இருந்த அப்பள்ளி தலைமையாசிரியர் திரு.ஜெகதீஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் முல்லைச்செல்வன் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப்பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை தலைவர் குமரன் மாரிமுத்து மற்றும் விஜய் வேலாயுதம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த ஆண்டில் தமிழ்மொழி விழா நிகழ்ச்சியை புருவாஸ் மாவட்ட அளவில் இருக்கின்ற 15 தமிழ்ப்பள்ளிகளையும் ஒன்றிணைத்து நடத்த வேண்டும் என்று தினகரன் கோவிந்தசாமி தனதுரையில் கேட்டுக்கொண்டார்.



