
கோலாலம்பூர், மே-13-சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘Operation Cyber Guardian’ அதிரடிச் சோதனைகளில், இணையம் வாயிலாக சிறார்களை வேட்டையாடியதன் பேரில் நாடு முழுவதும் 117 பேரைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகளில், சிறார்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் சுமார் 1.4 மில்லியன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் நேற்றையச் செய்தியாளர் சந்திப்பில் இவ்விவரங்களை வெளியிட்டார்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 15 வயது சிறுவன் முதல் 66 வயது முதியவர் வரை அடங்குவர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில அரசு ஊழியர்களும் சிக்கியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலமாகச் சிறார்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை ஆபாச வலையில் வீழ்த்துவதையே இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
டிஜிட்டல் உலகில் பெருகி வரும் இத்தகைய அச்சுறுத்தல்கள், பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இணையதளப் பயன்பாட்டில் பிள்ளைகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு டத்தோ குமார் கேட்டுக் கொண்டார்.



