
கோம்பாக், ஆகஸ்ட் 13 – கோம்பாக் LRT நிலையத்தில் இன்று காலை பயணி ஒருவர் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 9.05 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர நிறுத்து அமைப்பு செயல்படுத்தப்பட்டு, மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
Rapid KL ஊழியர்கள் மற்றும் துணைப் போலீசார் பயணியை தண்டவாளப் பகுதியிலிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் வரும் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூரிலுள்ள ‘Tawakkal Specialist’ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தண்டவாளம் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலை 9.12 மணிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
இதனிடையே, இன்று காலை தாமான் ஜெயா மற்றும் யூனிவர்சிட்டி நிலையங்களுக்கு இடையே மற்றொரு ரயில் மின்தடை காரணமாக சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரயில் சேவையிலிருந்து நீக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், கிளானா ஜெயா LRT சேவை காலை 10.25 மணிக்கு மீண்டும் தொடங்கியது.



