
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – பொதுமக்களிடையே நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம், மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்துடன் இணைந்து இலவச புற்றுநோய் சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடத்தவுள்ளது.
காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறும் இத்திட்டத்தில், உடல் பரிசோதனை, இரத்தத்தில் கொழுப்பின் அளவு, HbA1c, மனநலப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, முழுமையான இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பெண்களுக்கு Pap Smear பரிசோதனையும் வழங்கப்படவுள்ளது.
மேலும், இச்சுகாதாரப் பரிசோதனை மலேசியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலையில், வெளிநாட்டவர்களுக்கு RM90 கட்டணம் விதிக்கப்படும். 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கான Prostate Specific Antigen பரிசோதனைக்கு கூடுதலாக RM20-உம், பெண்களுக்கான Pap Smear பரிசோதனைக்கு கூடுதலாக RM50-உம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அனைவரும் முன்பதிவு இல்லாமல் நேரடியாகப் பங்கேற்கலாம். இரத்தப் பரிசோதனை மேற்கொள்வோர் அதற்கு முன் 8 முதல் 10 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும், MyKad அடையாள அட்டை மற்றும் குடிநீரைக் கொண்டு வருவதுடன், வசதியான ஆடைகளை அணிந்து வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் Himalaya Wellness Malaysia சார்பில் உடல்நலம் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.



