
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12 – Asean Hyundai கிண்ணக் கால்பந்து போட்டியில் தேசிய வீரர் G. பவித்ரன், பிலிப்பின்ஸுக்கு எதிராக வெற்றி கோலை அடித்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இனவெறி கருத்துகளுக்கு இலக்காகியுள்ளார்.
அவ்வெற்றியின் வாயிலாக, மலேசியா இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால், இணையத்தில் பவித்ரனுக்கு எதிராக இனவெறி கருத்துகள் குவிந்தது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த அவதூறு கருத்துகளில் பல, இந்தோனேசிய சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏராளமான மலேசியர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பாக Harimau Malaya ஃபேஸ்புக் பக்கத்தில் பவித்ரனுக்கு ஆதரவு தெரிவித்து, அவர் நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்பை பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையில், பவித்ரனின் சகோதரி, வீரர்களை அவர்களின் இனத்தின் அடிப்படையில் அல்ல, நாட்டுக்கான அவர்களின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய அணியின் சின்னத்தை அணியும் ஒவ்வொரு வீரரும் மலேசியாவுக்காகவே போராடுகிறார்கள் என்பதால், தோலின் நிறத்தை விட நாட்டுப்பற்று முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
21 வயது பவித்ரன், இப்போட்டி நெடுகிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
லாவோஸ் அணிக்கு எதிராக 4-0 என முன்னதாக மலேசியா வெற்றிப் பெற்ற ஆட்டத்திலும் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.



