
ஷா அலாம், மே-12-இன்று விடியற்காலையில் கிள்ளான் , ஜாலான் காப்பார்
5ஆவது மைலில் வாகனத்தினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் இரண்டு மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டதால் மரணம் அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து அதிகாலை மணி 3.23க்கு தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் ( Ahmad Mukhlis Mukhtar) தெரிவித்தார்.
சுமார் 30 வயதுடைய அந்த ஆடவரை மீட்கும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த எழுவர் கொண்ட குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்த ஆடவர் ஸ்டிரெச்சர் ( Stretcher ) மூலம் கால்வாயிலிருந்து வெளியே மீட்கப்பட்டபோதிலும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.



