
குவாலா சிலாங்கூர், மே-17-குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதியின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான மோதலில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுக் கூட்டம் முடிந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு இந்த பரபரப்பு ஏற்பட்டு, நாற்காலிகளும் பறந்தன.
தொகுதித் தலைவர் எம். சிவபாலனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்று ஒரு குழுவினர் மண்டபத்திற்குள் நுழைந்து கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் வெடித்தது.
கிராமத் தலைவர்கள் நியமனம் தொடர்பாகவும் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் தொகுதி மட்டத்தில் இதற்கு வாக்களிக்க முடியாது என்றும், இது முழுக்க முழுக்க கட்சியின் மத்தியத் தலைமையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் சிவபாலன் விளக்கம் அளித்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில், நாற்காலிகள் பறந்ததில் 3 பெண் உறுப்பினர்களின் கைகளில் வீக்கம் உள்ளிட்ட சிறு காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்தும், கூட்டத்திற்கு முன்னதாக சிவபாலனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்தும் போலீஸில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்திற்குப் பின் இந்த குழப்பம் ஏற்பட்டபோதிலும், கட்சியின் பொதுக்கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது என்றும், அது கட்சியின் அரசியலமைப்பின் படி முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும் பி.கே.ஆர் பொதுச் செயலாளர் டத்தோ Dr Fuziah Salleh உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்தாண்டு குவாலா சிலாங்கூர் பி.கே.ஆர் தொகுதித் தேர்தல் முடிந்ததிலிருந்தே, அங்குக் குழப்பம் நிலவி வருவதாக முன்னதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



