
கோலாலாம்பூர், மே-17-அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதும், ஜனநாயக அமைப்பில் சமநிலை மற்றும் நல்வழிகாட்டியாக செயல்படுவதும் எதிர்க்கட்சிகளின் அடிப்படை கடமையாகும் என, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
எனவே, எதிர்க்கட்சிகள் எப்போதும் அரசாங்கத்தைக் கவிழ்க்கவே முயல்கின்றன என்று முத்திரை குத்துவது முற்றிலும் தவறானது என்றார் அவர்.
ஷா ஆலாமில் நடைபெற்ற ‘சிலாங்கூர் மக்கள் சங்கமம்’ பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், எதிர்க்கட்சிகள் மடானி ஆட்சியைக் கவிழ்க்கப் பார்ப்பதாக தொடர்ந்து கூறி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
ஆனால், மக்கள் விரோதத் திட்டங்களைக் கண்டிப்பதும், அவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதிச் செய்வதும் மட்டுமே எதிர்க்கட்சியின் வேலை என, பெர்சாத்துக் கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் தலைவருமான சஞ்சீவன் தெளிவுப்படுத்தினார்.
இளைஞர்கள் மற்றும் உள்ளூர் பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், குறிப்பாக ஷா ஆலாம் தொகுதி வாக்காளர்கள், வரும் பொதுத் தேர்தல் அல்லது மாநிலத் தேர்தல்களில் நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



