
கோலாலம்பூர், மே-18-எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் (PN), தங்களுடன் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பும் பிற அரசியல் கட்சிகளுக்கான நிபந்தனைகளை வகுக்க ஒரு சிறப்புக்குழுவை அமைக்கவுள்ளது.
உறுப்புக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு இந்த சிறப்புக்குழு உருவாக்கப்படும் என PN பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
PN கூட்டணியின் அதிகாரப்பூர்வ உறுப்புக் கட்சியாக மாறாமல், கொள்கை அளவில் ஒத்துப்போகும் கட்சிகளுடன் ஒரு வியூகப் பங்காளியாக இணைந்து செயல்பட அக்கூட்டணி தயாராக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.
அதே வேளையில், பாரிசான் நேஷனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ம.இ.கா, தங்களின் கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை PN உச்சமன்றம் அதிகாரப்பூர்வமாக மீட்டுக் கொண்டுள்ளது.
ம.இ.கா தரப்பிலிருந்து முறையான ஒப்புதல் கிடைக்காததாலும், தாங்கள் பெரிக்காத்தானில் இணைய விண்ணப்பிக்கவில்லை என ம.இ.கா பகிரங்கமாக அறிவித்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தாக்கியுடின் சொன்னார்.
இந்தப் புதிய தேர்தல் உடன்படிக்கைக் குழு, வரும் தேர்தல்களில் PN கூட்டணியின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



