
ஜப்பானில் இணையத் தளங்களில் உலக அளவில் ட்ரெண்டாகி வரும் ‘பஞ்ச்’ (Punch) என்ற குரங்குக் குட்டியின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்து சாகசம் செய்ய முயன்ற 2 அமெரிக்கப் பிரஜைகளை அந்நாட்டு போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
தலைநகர் தோக்யோவுக்கு வெளியே உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 24 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் கூண்டின் வேலியைக் கடந்து பாதுகாப்பு பள்ளத்திற்குள் குதித்துள்ளார்;
மற்றொரு 27 வயது அமெரிக்கப் பாடகர் அதனைத் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
தனது தாயால் கைவிடப்பட்ட ‘பஞ்ச்’ என்ற இந்த Macaque இன குட்டிக்குரங்கு, IKEA பொம்மையைக் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இவ்வாண்டில் உலகளவில் பேசும் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக மிருகங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இவ்விரு அமெரிக்கர்கள் மீதும் ஜப்பானிய போலீஸார் கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



