வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; FBI மற்றும் இரகசிய சேவை அதிகாரிகள் குவிப்பு

வாஷிங்டன், மே-24,
அமெரிக்கா, வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு வெளியே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்; வழிப்போக்கர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அமெரிக்க இரகசிய சேவை நிறுவனத்தின் தகவலின்படி, மாலை 6 மணிக்குப் பிறகு பாதுகாப்பு சோதனைச் சாவடியை நெருங்கிய நபர் ஒருவர், தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மீது திடீரென சுடத் தொடங்கினார்.
உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில் அந்த நபர் படுகாயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சண்டையின்போது அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவரும் காயமடைந்தார்.
எனினும், அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தின் போது அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் தான் இருந்தார்.
ஆனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
FBI இயக்குனர் காஷ் பட்டேல், மத்திய முகவர்கள் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.



