உலகக் கோப்பை காற்பந்து போட்டி மைதானங்களுக்கு மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை – FIFA அறிவிப்பு

நியூயார்க் , ஜூன் 4 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் போத்தல்கள் கொண்டு வருவதற்கு FIFA எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் தடை விதித்துள்ளது.
கடைசி நிமிடத்தில் செய்யப்பட்ட இந்தக் கொள்கை மாற்றத்தால், தாகமாக இருக்கும் ரசிகர்கள் போத்தல் தண்ணீருக்குப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகக்கூடும் என்று தெ அத்லெடிக் செய்தி வெளியிட்டது.
கடந்த மாதம் வரை, FIFA-வின் அதிகாரப்பூர்வ மைதான விதிகளில்
1 லிட்டர் கொள்ளளவு வரையிலான, பிளாஸ்டிக் போத்தல்களை மைதானத்திற்குள் கொண்டு வரலாம் என்ற விதி இருந்தது.
இருப்பினும், அந்த வழிகாட்டுதல்கள் இப்போது தண்ணீரை மீண்டும் நிரப்பக்கூடிய போத்தல்களை வெளிப்படையாகத் தடை செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11 ஆம்தேதி மெக்சிகோ சிட்டியில் உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடங்கவிருக்கும் நிலையில், காற்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான FIFA இந்த வழிகாட்டுதல்களை ஏன் மாற்றியது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியின்போது , திறந்தவெளி மைதானங்களில் நிலவும் கடும் வெப்பத்தால் ரசிகர்களுக்கு உடல்நலக் பாதிப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்த போதிலும், FIFA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



